Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச)
மின் கம்பி கொள்முதலில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மின் கம்பி கொள்முதல் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் (FIR) பல்வேறு முறைகேடுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஒரே விலையில் பல நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளதாகவும், சில டெண்டர் விண்ணப்பங்கள் ஒரே ஐபி முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தப் பதிவு சுட்டிக்காட்டுகிறது.
மேலும், அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலை கொடுத்து மின் கம்பிகள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், தரம் குறைந்த மின் கம்பிகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் தமிழக வெற்றிக் கழக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.
மக்களின் வரிப்பணம் யாருடைய பாக்கெட்டுக்குச் சென்றது என்றும், இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் அதிகார மையம் யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ள அந்த அமைப்பு, மின்சாரம் மக்களின் அத்தியாவசியத் தேவை என்பதை தமிழக அரசுக்கு தெரியாதா அல்லது தெரிந்தும் அலட்சியம் காட்டுகிறதா என விமர்சித்துள்ளது.
மேலும், ஆதாரம் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவரையும் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்துள்ள தமிழக வெற்றிக் கழக ஐடி விங், “திராவிட மாடல் ஆட்சியின் குட்டு ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றும் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
மின் கம்பி கொள்முதல் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை FIR-ல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தகவல்களை முன்வைத்து தமிழக வெற்றிக் கழக ஐடி விங் எழுப்பியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ