Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருண்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் பணியாற்றியபோது, பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகிவிட்டு ஏமாற்றியதாக அந்தப் பெண் திருநெல்வேலி சரக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு ஆய்வாளர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை போன்ற ஒழுக்கம் நிறைந்த துறையில் பணியாற்றும் அதிகாரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஆய்வாளர் அருண்குமார் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b