Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று தொடங்கியுள்ளது.
இன்று காலை 8 மணி அளவில் தொடங்கிய இந்த முகாம் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 30,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து தரப்பினரும் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, விற்பனை, மார்க்கெட்டிங், வங்கி, மனிதவள மேலாண்மை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.
முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ்கள், பயோடேட்டா மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேரடியாக வருகை தரலாம். இது முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் என்பதால், பங்கேற்பாளர்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களது தகுதிக்கேற்ற வேலையை பெற்றுக்கொள்ளுமாறு சென்னை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b