ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டத்தை த.வெ.க அரசு உடனடியாக இயற்ற வேண்டும் - நீலம் பண்பாட்டு மையம்
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டத்தை த.வெ.க அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அருகே தையூர் சின்னம்மா ந
Neelam


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டத்தை த.வெ.க அரசு உடனடியாக இயற்ற வேண்டும்

என நீலம் பண்பாட்டு மையம் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது,

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அருகே தையூர் சின்னம்மா நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பிரவீன்குமார், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு வீட்டின் அருகே நின்றிருந்தபோது காரில் வந்த கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை தொடர்பாக பெண்ணின் சகோதரர் கவுதம், தவெக பிரமுகர் ஏழுமலை உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சதீஷை காவல்துறை தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள சதீஷை உடனடியாக கைது செய்வதுடன், இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ள முழுமையான சதித்திட்டத்தையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்.கொலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

பிரவீன்குமார் காதலித்து வந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இக்கொலை நடைபெற்றிருப்பது ஆணவக்கொலை என்ற கோணத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மற்றும் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமையை குடும்பத்தின் பொருளாதார அந்தஸ்து அல்லது சமூக மதிப்பின் பெயரில் மறுப்பதும்,அதற்காக ஒரு உயிரைப் பறிப்பதும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும்,இந்தக் கொலையில் தவெக பிரமுகர் உள்ளிட்ட அரசியல் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அரசியல் செல்வாக்கு, கட்சிப் பின்னணி அல்லது அதிகாரத் தொடர்பு எதுவாக இருந்தாலும் தமிழக அரசு எந்தவித பாரபட்சமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆணவக்கொலைகள் வெவ்வேறு சாதிகளுக்கு இடையிலும், ஒரே சாதிக்குள்ளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இதை உணர்ந்துதான் ஆணவக்கொலைகளைத் தடுக்கவும்,குற்றவாளிகளைத் தண்டிக்கவும் தனிச்சட்டம் தேவை என்ற கோரிக்கை எழுகிறது.

இனியும் தாமதிக்காமல் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டத்தை தவெக

அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN