சட்டமன்றமே ரீல்ஸ்க்காக தான் நடத்தப்படுகிறது - கனிமொழி எம்பி பேட்டி
தூத்துக்குடி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமா
Kanimozhi Karunanidhi


தூத்துக்குடி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

த.வெ.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தொடர்ந்து குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், லாக்கப் மரணங்கள் என்று சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கக்கூடிய சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதைவிட கவலைக்குரிய ஒன்று, இந்த குற்றங்களில் பல குற்றங்களை செய்திருக்கக் கூடியவர்கள் த.வெ.கவை சேர்ந்தவர்களாக நாம் காணக்கூடிய சூழல் இருக்கிறது.

சில நேரங்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல நேரங்களில் அங்கே இருக்கக்கூடிய நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்தப்படும்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இந்த ஆட்சியில் மாறி இருக்கிறது என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தவெகவின் அமைச்சர்கள் இன்றும் ரீல்ஸ் மோடில் தான் இருப்பதாக கூறியிருக்கிறார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனிமொழி எம்பி,

அரசைப் பற்றி பேசுகிறார் என்றால், அவர் கூட்டணியில் இருக்கக்கூடிய ஆட்சி அது. சட்டமன்றமே ரீல்ஸ்க்காக தான் நடத்தப்படுகிறது என்ற உணர்வை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN