Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதால், இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நவம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
இதற்கிடையே, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வசதியாக, நவம்பர் மாதத்துக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
மேலும், திருமலை மற்றும் திருப்பதியில் நவம்பர் மாதத்துக்கான வாடகை அறைகளின் ஒதுக்கீடும் நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
கடந்த 18-ந்தேதி முதல் நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு வெளியிடப்பட்டு வருகிறது.
எனவே, தரிசன டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA