Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முக்கியமான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய நாள் விவாதத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இதில் குறிப்பாக நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் பற்றாக்குறை, சாலை வசதிகள், திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை திட்டங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்புவார்கள் என்று தெரிகிறது.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று பேரவையில் விரிவாக பதிலளித்து பேச வாய்ப்பு உள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சரின் பதிலுரையில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இன்று கல்வித் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறுகிறது.
பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்து பேசுகிறார்.
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பதிலுரை வழங்குகிறார்.
பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி, புதிய கல்லூரிகள் தொடங்குதல் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்கள் குறித்து அவர் பேசுவார் என்று கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b