Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
மராட்டிய மாநிலம் அமராவதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையின் 3-வது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு அமைந்துள்ளது.
இங்கு பிறந்த குழந்தைகள் வென்டிலேட்டர் வசதியுடன் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் 39 பச்சிளம் குழந்தைகள் இருந்த அறையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வென்டிலேட்டர் வெடித்ததில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த அறை முழுவதும் புகை சூழ்ந்தது.
இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, அறையில் இருந்த பச்சிளம் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பெரும் போராட்டத்துக்கு பிறகு பல குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
எனினும், இந்த தீ விபத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் தீக்காயம் மற்றும் புகை மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 6 குழந்தைகள் படுகாயமடைந்தன.
படுகாயமடைந்த 6 குழந்தைகளும் உடனடியாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயங்கர தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வென்டிலேட்டர் வெடித்ததே தீ விபத்துக்கான காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA