Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் உள்ள கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் பராமரிக்கப்படுவதாகவும், கடும் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் கே. சிவசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பெரும்பாலான கீழமை நீதிமன்ற வளாகங்களில் உள்ள கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும், தண்ணீர் வசதி இல்லாமலும், கதவுகள் உடைந்த நிலையிலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள், பெண் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், கழிப்பறைகளை சுற்றி கழிவுநீர் தேங்குவதாலும், சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாலும் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இது குறித்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் மற்றும் பொதுப்பணித்துறையின் முதன்மை செயற்பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்பது நிர்வாகத்தின் கடமை மட்டுமல்ல, அதனை பயன்படுத்துவோரும் அதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் கருத்து தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b