Enter your Email Address to subscribe to our newsletters

மார்க்காபுரம் , 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தின் ஒருங்கிணைந்த பிரகாசம் மாவட்ட மேற்கு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் 30 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் வகையில், வேலிகொண்டா திட்டம் வருகிற 31-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.
இதையொட்டி நல்லமல சாகர் நீர்த்தேக்கத்தில் 10.7 டி.எம்.சி. கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட உள்ளது.
இதுகுறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 1996-ம் ஆண்டு மார்ச் 5-ந் தேதி, ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது வேலிகொண்டா திட்டத்திற்கு நானே அடிக்கல் நாட்டினேன். 30 ஆண்டுகளுக்கு பிறகு அதே திட்டத்தை நானே தொடங்கி வைப்பது மகிழ்ச்சியும், உணர்ச்சிகரமான தருணமும் ஆகும்.
பல ஆண்டுகளாக பல்வேறு தடைகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு வந்த இந்த திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. இதன் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிருஷ்ணா நதி நீர் கொண்டு வரப்படுகிறது.
வேலிகொண்டா திட்டத்தின் முதல் கட்டம் மூலம் 1.19 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். 2-வது கட்டம் நிறைவடைந்தால் மேலும் 3.28 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் கிடைக்கும். இதனால் பல தலைமுறைகளாக வறட்சியுடன் போராடி வரும் மேற்கு பிரகாசம் பகுதி மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
மேலும், இப்பகுதி மக்களுக்கு வீடுதோறும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட காலமாக மேற்கு பிரகாசம் பகுதியை பாதித்து வரும் ஃப்ளோரைடு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காணப்படும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மார்க்காபுரம் பகுதிக்கு வேலிகொண்டா திட்டம் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தும். இந்த திட்டத்தின் மூலம் பாசன வசதி மட்டுமின்றி, இப்பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
ராயலசீமா மற்றும் ஒருங்கிணைந்த பிரகாசம் மாவட்டங்களை தோட்டக்கலை மையமாக மாற்ற ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெங்களூரு-அமராவதி நெடுஞ்சாலை மற்றும் ராமாயபட்டினம் துறைமுகம் ஆகியவை வர்த்தக மற்றும் தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு விவசாயியின் வயலுக்கும் தண்ணீர், ஒவ்வொரு இளைஞருக்கும் வேலைவாய்ப்பு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA