Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
கூட்டணி அரசை விமர்சித்து வருவதால் தன்னை குறிவைத்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் அம்பட்டி ராம்பாபு குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் தற்போது எஃப்ஐஆர் நிலையில்தான் உள்ளன. எந்த வழக்கிலும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. ஒரே சம்பவத்தை காரணமாகக் காட்டி அடுத்தடுத்து பல வழக்குகளை பதிவு செய்து என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி நடக்கிறது.
மத்திய மந்திரி பெம்மசானி சந்திரசேகர் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டதாக சிஐடி வழக்கு உள்பட மேலும் ஒரு வழக்கும், சமீபத்தில் பட்டாபிபுரம் போலீஸ் நிலையத்திலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தொடர்ந்து எங்கள் கட்சியை ‘கோடாளி கட்சி’ என்று விமர்சித்து வருகிறார். அதற்கு அரசியல் நையாண்டியாக பதிலளிக்கும் வகையில்தான் எனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ‘என்டிஆருக்கு முதுகில் குத்திய கட்சி’ என்ற பாடலை வெளியிட்டேன்.
ஜெகன் மோகன் ரெட்டியை மிகவும் அவமதிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு வீடியோக்கள் மற்றும் பதிவுகள் வெளியிட்டவர்கள் மீது புகார் அளித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆளும் கட்சிக்கு ஒரு சட்டமும், எதிர்க்கட்சிக்கு வேறு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
எத்தனை வழக்குகள் பதிவு செய்து என்னை அச்சுறுத்த முயன்றாலும் நான் பயப்பட மாட்டேன். அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து அரசியல் விமர்சனங்களை முன்வைப்பேன்.
சத்தெனப்பள்ளி, சிலகலூரிபேட்டை, ரேப்பள்ளி பகுதிகளில் சூதாட்ட கிளப்புகள் வெளிப்படையாக செயல்படுகின்றன.
இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரகுராம கிருஷ்ண ராஜு மீது நாங்கள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சந்திரபாபு நாயுடு தலைமையில் இயங்குவது தெலுங்குதேசம் கட்சி அல்ல; அது ‘முதுகில் குத்தும் கட்சி’ என்று அம்பட்டி ராம்பாபு விமர்சித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA