Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக வனத்துறையின் போலி என்கவுண்டர் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற ஜோசப் விஜய் வலியுறுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில்,
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் அம்மாநில வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், நியாயம் கிடைக்க சிபிஐ விசாரணை வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் விவசாயிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, இச்சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட ‘போலி என்கவுண்டர்’ என்பதை நிரூபித்து, அந்தக் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
10 அடிக்கும் குறைவான, மிக நெருக்கமான தொலைவிலிருந்து அவர்கள் சுடப்பட்டிருப்பது வனத்துறையின் கொடூரமான முகத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த விவகாரத்தில் கர்நாடக காவல்துறையின் விசாரணையில் துளியும் நம்பிக்கையில்லை. எனவே உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரவும் இந்த வழக்கை உடனடியாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டியது அவசியமாகும்.
தவெக அரசு இந்த விஷயத்தில் மெளனம் காப்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செய்யும் துரோகமாகும்.
எனவே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தனது கூட்டணிக் கட்சி ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என அம்மாநில அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்
Hindusthan Samachar / ANANDHAN