Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரையில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டுகள் முழுமையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதற்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளில் உள்ள 40 படுக்கைகளிலும் கொசு வலைகள் கட்டப்பட்டு, நோயாளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு காய்ச்சலுக்கு துரிதமாகவும், திறம்படவும் சிகிச்சை அளிக்கும் வகையில், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய சிறப்புக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தேவையான மருந்துகள், ரத்த தட்டுக்கள் உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது மதுரையில் சுகாதாரத்துறை சார்பாக வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடித்தல் ஆங்காங்கே தேங்கி இருக்கும் நீரை அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b