Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் தற்போது 14 அரசுப் பல்கலைக்கழகங்கள் நிரந்தர துணைவேந்தர்கள் இல்லாமல் தற்காலிக நிர்வாகக் குழுக்கள் அல்லது பொறுப்பு அதிகாரிகளால் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவி வரும் துணைவேந்தர் நியமன சட்டப் போராட்டங்கள் காரணமாக, பல முக்கிய பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களான காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் இடைக்கால துணைவேந்தர்களை நியமித்து வேந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் இடைக்கால துணைவேந்தராக அப்பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இடைக்கால துணைவேந்தராக மூத்த பேராசிரியர் பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இரு பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர் பதவி காலியாக இருந்ததால் நிர்வாகப் பணிகள் மற்றும் கல்விச் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில், இந்த இடைக்கால நியமனம் மூலம் பல்கலைக்கழக நிர்வாகம் சீராக இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிரந்தர துணைவேந்தர்கள் நியமிக்கப்படும் வரை இவர்கள் இருவரும் இடைக்கால பொறுப்பில் இருந்து பல்கலைக்கழகத்தின் அனைத்து நிர்வாக மற்றும் கல்விப் பணிகளையும் கவனித்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b