Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே உள்ள புதுப்பேர் பகுதியில் தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பது போல் வந்த மர்ம நபர்கள், திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
கொள்ளையர்கள் முதலில் ஏடிஎம் மையத்தில் உள்ள எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் இணைப்பை துண்டித்துள்ளனர். இதனால் ஏடிஎம் உடைக்கப்படும்போது அலாரம் ஒலிக்கவில்லை. பின்னர் அவர்கள் கொண்டு வந்திருந்த கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் பெட்டகத்தை துண்டு துண்டாக வெட்டி உடைத்துள்ளனர். உள்ளே இருந்த சுமார் 9 லட்சம் ரூபாய் பணத்தை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளை கும்பல் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மீது ஸ்பிரே பெயிண்ட் அடித்துவிட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b