நாட்றம்பள்ளி அருகே பலூன் ஊதியபோது தொண்டையில் சிக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு
திருப்பத்தூர், 25 ஆகஸ்ட் (ஹி.ச) திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பலூன் ஊதியபோது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பச்சூர் பகுதியைச் சேர்ந்த குமார் – சத்யா தம்பதியினருக்க
பலூன்


திருப்பத்தூர், 25 ஆகஸ்ட் (ஹி.ச)

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பலூன் ஊதியபோது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பச்சூர் பகுதியைச் சேர்ந்த குமார் – சத்யா தம்பதியினருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்களது இரட்டை ஆண் குழந்தைகளான சோம்நாத், சேஸ்நாத் ஆகிய இருவரும் 6 வயதுடையவர்கள்.

இந்நிலையில், நேற்று இரவு இரட்டையர்கள் வீட்டில் பலூன் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சோம்நாத் பலூனை ஊதிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பலூன் தொண்டையில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனை பார்த்த பெற்றோர் சிறுவனை உடனடியாக மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam