Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை காவல் எல்லைகளுக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலைப் பாதையில், இளைஞர்கள் சிலர் பொறுப்பின்றி அத்துமீறி ஏறி மது அருந்துவதும், பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.
சுற்றுலா என்ற பெயரில் இந்த மலைப் பாதைக்கு வரும் இளைஞர்கள் சிலர், வனப்பகுதியின் ஆபத்தை உணராமல் மலை மீது ஏறி மது அருந்துகின்றனர்.
மேலும், தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொட்டலங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுகளை அங்கேயே வீசிச் சென்று சுற்றப்புறத்தைச் சீரழித்து வருகின்றனர்.
சமீபத்தில், மது அருந்திய இளைஞர் ஒருவர் மலைப்பாதையின் மிகக் செங்குத்தான, ஆபத்தான விளிம்பில் நினைவிழந்த நிலையில் படுத்துக் கிடக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
சற்று நிலைதடுமாறி உருண்டாலும் பல நூறு அடிகள் பள்ளத்தில் விழுந்து உயிர் பிரியும் பேராபத்து அதில் நிலவுகிறது.
போதையில் பாதை அறியாமல் மலை விளிம்பில் கிடப்பது எந்த நேரத்திலும் பெரும் அசம்பாவிதத்திற்கு வழிவகுக்கும்.
இளைஞர்கள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் வனவிலங்குகளின் வாழ்விடத்தைப் பாதிப்பதோடு, அவற்றின் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது.
இதுபோன்ற சட்டவிரோத மற்றும் ஆபத்தான செயல்கள் அசம்பாவிதத்தில் முடிவதற்குள், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை காவல்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து கட்டாஞ்சி மலைப்பாதையில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதே நேரத்தில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இயற்கை வளங்களையும் தங்கள் சொந்த உயிரையும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
Hindusthan Samachar / Durai.J