Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
மிலாது நபி திருநாளையொட்டி, இஸ்லாமியர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படும் இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஆறு வயதிலேயே தாயை இழந்த நபிகள் நாயகம், இளம் வயதில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்ததாகவும், 40 வயதில் இறைத்தூதுகளைப் பெறத் தொடங்கி, அடுத்த 23 ஆண்டுகளில் மக்களுக்கு உயரிய நெறிகளைப் போதித்ததாகவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
வறுமையிலும் செம்மையாகவும், தூய்மையாகவும், அழுக்காறு இன்றியும், உண்மையை மட்டுமே உரைத்தும், எவரிடத்தும் கோபம் கொள்ளாமலும், பேராசையின்றியும், அன்புடன் வாழ்ந்ததால்தான் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையே வரலாறாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் கடைப்பிடித்தவற்றையே போதனைகளாக வழங்கிய நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைவரும் பின்பற்றத்தக்க உன்னதமான பாடமாகத் திகழ்வதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இறை நம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், பிறருக்கு உதவுதல், ஏமாற்றாமல் இருத்தல், செல்வத்தின் மீது பேராசை கொள்ளாமை, கற்பைப் பேணுதல், பெண் சிசுவதையைத் தடுத்தல் உள்ளிட்ட உயரிய நெறிகளை நபிகள் நாயகம் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நபிகள் நாயகம் கற்பித்த உண்மை மற்றும் ஒழுக்கத்தை அனைவரும் கடைப்பிடித்து, உலகில் அமைதி, வளம், மனநிறைவு, மகிழ்ச்சி, ஒற்றுமை, சகோதரத்துவம், பிறருக்கு உதவும் குணம் மற்றும் கொடை ஆகியவை பெருக வேண்டும் எனக் கூறி, மிலாது நபி வாழ்த்துகளை அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ