Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், உரிய முறையில் தரிசனம் செய்ய முடியவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் அருகே அமைந்துள்ள அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்டு வருகின்றனர். அன்னதானம் முடித்துவிட்டு வெளியே செல்லும் பக்தர்களுக்கு தனியாக வழி ஏற்படுத்தப்படாததால், அவர்கள் இலவச தரிசனத்திற்கான வரிசை வழியாக வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலவச தரிசன வரிசை வழியாக அமைச்சர் ரமேஷ் கோயிலுக்குள் செல்ல முற்பட்டபோது, எதிரே பக்தர்கள் கூட்டமாக வருவதைக் கண்டு அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். அன்னதானம் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு முறையான பாதை அமைக்கப்படாதது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கடிந்து கொண்டார்.
மேலும், கோயிலுக்குள் பத்திரிகையாளர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், எவ்வாறு அனுமதித்தீர்கள் என அதிகாரிகளிடம் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களிடம் கோயிலுக்கு வெளியில் சென்று காத்திருக்குமாறு தெரிவித்த அமைச்சர், தனது ஆய்வை முடித்துவிட்டு வெளியே வந்து பேட்டி அளிப்பதாக கூறிவிட்டு சென்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam