Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல் , 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அருண். இவர் தனது தொழில் விரிவாக்கத்திற்காக பெரும் தொகையை கடனாக பெற முயற்சித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு மோகனூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. தனக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் உயர்மட்ட தொடர்புகள் இருப்பதாகவும், நிச்சயமாக ரூ.100 கோடி வரை கடன் வாங்கித் தருவதாகவும் செந்தில்குமார் நம்பிக்கை அளித்துள்ளார்.
இதனை நம்பிய தொழிலதிபர் அருண், கடனுக்கான முன்பணம், பரிசீலனைக் கட்டணம் மற்றும் பல்வேறு செலவுகளுக்காக படிப்படியாக ரூ.2.75 கோடி வரை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, கடனை வாங்கித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். நீண்ட நாட்களாகியும் கடன் கிடைக்காததால் சந்தேகமடைந்த அருண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செந்தில்குமார் கடன் வாங்கித் தரும் எண்ணமின்றி மோசடி நோக்கத்துடன் பணத்தை பெற்றது உறுதியானது.
இதையடுத்து மோகனூரைச் சேர்ந்த செந்தில்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, பணம் எங்கு முதலீடு செய்யப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b