Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசிடம் இருந்து வழங்கப்பட வேண்டிய ரூ.5,109.92 கோடி நிதி இன்னும் நிலுவையில் இருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தற்போது துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் இந்த நிதி நிலுவை குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, பல்வேறு நிதியாண்டுகளுக்கான மத்திய அரசின் நிதிப் பங்கு தமிழகத்திற்கு முழுமையாக விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.1,788.79 கோடியும், 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.1,496.04 கோடியும், 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.1,825.09 கோடியும் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட வேண்டியுள்ளது.
இதன்படி, மூன்று நிதியாண்டுகளுக்கான நிலுவைத் தொகையை சேர்த்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்திற்காக தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து மொத்தம் ரூ.5,109.92 கோடி நிதி பெறப்பட வேண்டியுள்ளது.
பள்ளி மாணவர்களின் கல்வி, ஆசிரியர்களுக்கான பல்வேறு திட்டங்கள், பள்ளிகளின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட கல்வி சார்ந்த பணிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் நிதி பங்கு நிலுவையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam