Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மீலாதுன் நபியை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகம் அன்பு, கல்வி, தொழிலாளர்களின் உரிமை, உண்மை, இரக்கம் உள்ளிட்ட உயரிய கொள்கைகளை வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நபிகள் நாயகம் காட்டிய வழியில் பயணிக்கும் இஸ்லாமிய மக்களின் வளர்ச்சிக்கும், உரிமைகளுக்கும் தொடக்க காலம் முதலே திமுக அரணாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் முதன்முதலில் திருவாரூரில் நபிகள் நாயகம் விழாவில்தான் சந்தித்துக் கொண்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
1969ஆம் ஆண்டிலேயே மீலாதுன் நபிக்கு அரசு விடுமுறை வழங்கியது, உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது, சிறுபான்மையினர் நல ஆணையம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் உருது அகாடமி உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்கியது என திமுக ஆட்சியின் நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்லாமியர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக திமுக தொடர்ந்து துணை நிற்கும் என்றும், நீண்டகால நட்புறவுடன் அன்பு வழியில் பயணிக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீலாதுன் நபி வாழ்த்துகள் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam