Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
மத்திய கிழக்கின் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை பதித்தால், ஈரானுக்கு சொந்தமான கப்பல்கள் உடனடியாக தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது Truth Social வலைதளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப்,
ஹோர்முஸ் ஜலசந்தியின் சர்வதேச கடற்பரப்பில் ஈரானால் பதிக்கப்பட்டிருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அமெரிக்க படையினரால் வெற்றிகரமாக அகற்றப்பட்டு விட்டதாகவும், அவை வெடிக்கச் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இனிமேல் ஈரானின் எந்தவொரு கப்பலோ அல்லது படகோ புதிதாக கண்ணிவெடிகளை வைக்க முயன்றால், அந்த கப்பல் உடனடியாக தாக்கி அழிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கண்ணிவெடி விவகாரத்தில் அமெரிக்கா பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைபிடிப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியின் ஒவ்வொரு அங்குலமும் அமெரிக்காவின் விண்வெளிப் படையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஈரானின் எந்தவொரு அத்துமீறலையும் உடனடியாக முறியடிக்க அமெரிக்கா தயார் நிலையில் உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க மத்திய கட்டளை மையம் வெளியிட்ட அறிக்கையில், ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே கண்ணிவெடிகளை பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானைச் சேர்ந்த 16 கப்பல்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகின் மொத்த எரிசக்தி விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b