Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாவட்டம்
எடப்பாடி அருகே கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில், கடந்த 11ஆம் தேதி பச்சை வலையால் சுற்றிக் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,
உயிரிழந்தவர் ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (41) என்பதும், குமாரபாளையத்தில் உள்ள நாட்டுக்கோழி வறுவல் கடையில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆனந்த் தன்னிடம் பெற்ற முன்பணத்தை திருப்பித் தராமல் இருந்ததாகவும், கடையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் சௌந்தர் (41), ஆனந்துக்கு மதுவாங்கிக் கொடுத்து, முஸ்தபா என்ற அலாவுதீன் (32), அருள் (30), குல்பிர் பாஷா (46) ஆகியோருடன் சேர்ந்து அவரை தாக்கிக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் ஆனந்தின் உடலை ஆட்டோவில் ஏற்றிச் சென்று கள்ளிப்பாளையம் கல்குவாரியில் வீசியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் கடை உரிமையாளர் சௌந்தர், முஸ்தபா என்ற அலாவுதீன், அருள், குல்பிர் பாஷா மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (49) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கில் குற்றவாளிகளை 12 நாட்களில் கைது செய்த தனிப்படை போலீசாரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் பாராட்டினார்.
Hindusthan Samachar / P YUVARAJ