Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
பொறியியல், அறிவியல் அல்லது மருத்துவத் துறையில் இருந்து வணிகத் துறைக்கு மாறுபவர்கள், தங்களது தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக்கொள்ள அதிகளவில் விற்பனை அழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என சோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நீங்கள் ஒரு பொறியாளராகவோ, விஞ்ஞானியாகவோ அல்லது மருத்துவராகவோ இருந்து வணிகத் துறைக்கு மாறுகிறீர்கள் என்றால், நிறைய விற்பனை அழைப்புகளை மேற்கொள்ளுங்கள்.
தேவையானால் நிராகரிப்பை எதிர்கொள்ளுங்கள்; ஆனால் விடாமுயற்சியுடன் இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்களது யோசனைகளை மற்றவர்களுக்கு விளக்குவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை விற்பனை முயற்சிகளின்போது உணர முடியும் என்றும், அதன் மூலம் சிறந்த தகவல் தொடர்புத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விற்பனைத் துறையில் பணியாற்றுபவர்களின் பணியை நேரடியாக அனுபவிக்கும் போது, அவர்கள் மீதான மரியாதையும் அதிகரிக்கும் என ஶ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து முயற்சி செய்து விற்பனை செய்வதன் மூலம் வணிகத்தில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பும் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒன்றை விற்காமல் வணிகம் என்பதே இல்லை. சில சமயங்களில் மிகவும் வெளிப்படையான விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும் எனக் குறிப்பிட்டு, வணிகத்தில் விற்பனையின் முக்கியத்துவத்தையும் ஶ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ