தமிழக சட்டப்பேரவையில் நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து சரமாரி கேள்விகள்
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) சட்டப்பேரவையில் இன்று நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பான விவாதம் சூடுபிடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை எடுத்துரைத்து அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்
தமிழக சட்டப்பேரவையில் நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து சரமாரி கேள்விகள்


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

சட்டப்பேரவையில் இன்று நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பான விவாதம் சூடுபிடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை எடுத்துரைத்து அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், மாவட்ட ஆட்சியர் மூலம் உரிய இடங்கள் கண்டறியப்பட்டு விரைவில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதேபோல் ஆரணி சட்டமன்றத் தொகுதியில் தற்போது வெறும் மூன்று கொள்முதல் நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், விவசாயிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தது மேலும் 15 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் புதிதாக திறக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அத்தொகுதி உறுப்பினர் ஜெயசுதா கவனத்திற்கு கொண்டு வந்தார்.

திட்டக்குடி பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களை எப்போது திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுப்பினர் சி.வி. கணேசன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், அனைத்து நிலையங்களின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டு, கிடப்பில் உள்ள நிலையங்கள் படிப்படியாக திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே திருவாரூர் மாவட்டத்தில் 118 நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் குற்றஞ்சாட்டினார்.

விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், மூடப்பட்ட நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / vidya.b