Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சந்திப்பின்போது, ராஜா முத்துப்பாண்டி தனது காமன்வெல்த் வெள்ளிப் பதக்கத்தை சிம்ரனிடம் காண்பித்தார்.
அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய சிம்ரன், இந்தச் சாதனை அவரது பயணத்தின் தொடக்கம் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அவர் அடைய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் நீங்கள் ஏற்கனவே இந்தியாவுக்கும் நமது தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் சர்வதேச அரங்கில் இத்தகைய சாதனையைப் படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. இதே உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் மேலும் பல வெற்றிகளையும் பதக்கங்களையும் வென்று சாதிக்க வேண்டும் என சிம்ரன் கூறி ராஜா முத்துப்பாண்டியை ஊக்கப்படுத்தினார்.
தொடர்ந்து ராஜா முத்துப்பாண்டியுடன் அன்பாக உரையாடிய சிம்ரன், அவரது சொந்த ஊரான கோவில்பட்டி மற்றும் குடும்பத்தினர் குறித்தும் கேட்டறிந்தார். தனது சொந்த ஊர் கோவில்பட்டி என ராஜா முத்துப்பாண்டி தெரிவித்தபோது, அந்த ஊருடன் தனக்குள்ள திரைப்படத் தொடர்பான நினைவுகளையும் சிம்ரன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
சந்திப்பின் இறுதியில், ராஜா முத்துப்பாண்டி தனது வெள்ளிப் பதக்கத்துடன் நடிகை சிம்ரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சர்வதேச அளவில் சாதனை படைத்த தமிழக வீரரை நடிகை சிம்ரன் நேரில் பாராட்டிய இந்தச் சந்திப்பு, அவரது வெற்றியை மேலும் சிறப்பிக்கும் இனிய தருணமாக அமைந்தது.
Hindusthan Samachar / P YUVARAJ