மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்புத்துறை அனுமதி கட்டாயம்
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச) மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம், சர்பத், குளிர்பானங்கள், நீர்மோர், இனிப்பு
Meenakshi


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச)

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம், சர்பத், குளிர்பானங்கள், நீர்மோர், இனிப்புகள் மற்றும் குடிநீர் வழங்குவோர் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அன்னதானம் மற்றும் உணவுப்பொருட்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பான முறையிலும் தயாரித்து வழங்க வேண்டும். உணவுகளில் செயற்கை சாயங்கள் பயன்படுத்தக்கூடாது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக வாழை இலை, பாக்கு மட்டை மற்றும் தொன்னைகள் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு தயாரிக்க தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதுடன், அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளையும் சரிபார்க்க வேண்டும். அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் உணவுக்கழிவுகளை முறையாக சேகரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் சேர்க்க வேண்டும்.

விழாவையொட்டி தற்காலிகமாக அமைக்கப்படும் குளிர்பான விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் இலவச குடிநீர் பந்தல்களிலும் தரமான குடிநீர் மற்றும் செயற்கை சாயங்கள் இல்லாத உணவுப்பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும்.

அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்க விரும்புவோர், FSSAI-யின் FoSCoS இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து, மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழை பெற்ற பின்னரே வழங்க வேண்டும்.

விதிமுறைகளை மீறுவோர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் பிரிவு 58-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் உணவுப்பொருட்கள் தொடர்பான புகார்களை தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ்அப் எண் 94440 42322 மூலம் தெரிவிக்கலாம்.

அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெறுவது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0452-2640036 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ