Enter your Email Address to subscribe to our newsletters

நாகாலாந்து, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாகாலாந்தின் துவென்சாங் மாவட்டம் போஸ்ட் ஆபிஸ் வார்டு பகுதியில் உள்ள மாவட்ட போக்குவரத்து அலுவலக (DTO) கட்டிடம், தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இன்று காலை இடிந்து விழுந்தது.
கட்டிடம் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 23ஆம் தேதி அவசரமாக இடிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் லித்ரோங்லா டோங்பி ருட்சா உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து ஜூலை 24ஆம் தேதி முதல் அலுவலகம் மூடப்பட்டதால், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, வரி வசூல், அனுமதிச்சீட்டு உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
தொடர் மழையால் துவென்சாங் மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் நிலம் உள்வாங்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஜூலை 19ஆம் தேதி முதல் DTO அலுவலகத்தின் கீழ்ப்பகுதியைச் சேர்ந்த 44 குடும்பங்கள், போஸ்ட் ஆபிஸ் வார்டு மற்றும் பஜார் ஏ வார்டைச் சேர்ந்த 5 குடும்பங்கள் என மொத்தம் 49 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ள நிலையில், DTO கட்டிடமும் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் நிலம் தினமும் சுமார் 6 முதல் 8 அங்குலம் வரை உள்வாங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P