Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்துள்ளார்.
பேரவையில் இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் (H1N1] தற்போது முழு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. கடந்த ஆண்டில் முதல் 4 மாதங்களில் [ஜனவரி -ஏப்ரல்] அதிகமாக இருந்த இந்தக் காய்ச்சல், இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சற்று அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் தொற்றை கண்காணிக்கவும், தடுக்கவும் சுகாதாரத் துறை சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதோடு, சிறப்பு கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் சுயமாக மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தேவைப்பட்டால் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக, முதியவர்களையும் கர்ப்பிணிப் பெண்களையும் இது அதிகமாகப் பாதிக்கும் என்பதால், நிலைமையை ஆலோசித்துத் தகுந்த முடிவுகளை எடுப்போம்.
பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
என்று அமைச்சர் அருண் ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b