Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு களப்பணிகளை மேற்கொள்ள கார் வசதியும், செலவினங்களுக்காக மாதம் ரூ.1 லட்சமும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு தற்போது ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது என்றார்.
எனவே, கவுன்சிலர்களின் செலவினங்களுக்காக வழங்கப்படும் தொகையை குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், துணை மேயர் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் தங்களது களப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள கார் வசதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வாகனப் பயன்பாடு மற்றும் தினசரி இதர செலவுகளுக்குத் தேவையான கூடுதல் நிதியை அரசிடமிருந்து பெற்றுத் தருவதற்கு மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துணை மேயர் மகேஷ்குமார் கேட்டுக்கொண்டார்.
துணை மேயரின் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாமன்றக் கூட்டத்தில் இருந்த கவுன்சிலர்கள் அனைவரும் மேசையைத் தட்டி பலத்த வரவேற்பு தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ