Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளதாகக் கூறி, திமுக சார்பில் இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சட்டப்பேரவையில் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், அன்றாடம் பயன்படுத்தும் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதாக குற்றம் சாட்டினார்.
குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தினமும் பயன்படுத்தும் அரிசி, சர்க்கரை மற்றும் துவரம் பருப்பு போன்ற பொருட்களின் விலை உயர்வு மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வால் குடும்ப பட்ஜெட்டில் பெரும் சுமை ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும் அவர்பேசுகையில் கூறியதாவது,
2007ஆம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டிருந்தது. அப்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்கள், தமிழக மக்களை பாதிக்காத வகையில் சிறப்பு பொது விநியோக திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார்.
அதன்படி, ரேஷன் கடைகளில் பருப்பு, ரவை, எண்ணெய், மைதா உள்ளிட்டவற்றின் விலையை சந்தை விலையை விட குறைவான விலையில் விற்க நடவடிக்கை எடுத்தார்கள். கடுகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட 10 மளிகைப் பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கினார்கள்.
கருணாநிதி 2007ஆம் ஆண்டு தொடங்கி வைத்த சிறப்பு பொது விநியோக திட்டம் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் சர்க்கரையின் அளவை விட கூடுதலாக வழங்க தற்போதைய அரசு ஆவன செய்ய வேண்டும்.
எனவே, அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்றும், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் கிடைக்க உறுதி செய்ய வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b