Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சமையல் எண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக வெற்றிக் கழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று தமிழக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சமையல் எண்ணெய் விலை மட்டும் கடந்த சில மாதங்களில் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், இதனால் அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு போராடும் ஏழை மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை வலியுறுத்தியுள்ள பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார், அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டிகை காலங்களில் அரசு ரேஷன் கடைகளில் மளிகை தொகுப்பு வழங்குவதைப் போல, தற்போதைய விலைவாசி நெருக்கடியை சமாளிக்கவும் ரேஷன் கடைகள் மூலம் மளிகைப் பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல், பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட், சிபிஐ எம்.எல்.ஏ ராமச்சந்திரன், சிபிஎம் எம்.எல்.ஏ செல்லசாமி உள்ளிட்டோரும் விலைவாசி உயர்வு குறித்து அரசுக்கு பேரவையில் எழுப்பினார்.
அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் பொது விநியோகத் துறையின் சார்பில் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
விலைவாசியை கட்டுப்படுத்த அரசு உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b