Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்க்டன், 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஈரான் சர்வதேச நிதி அமைப்புகளை அணுகுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சீன வங்கிகளை குறிவைக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப்,
நான் அதைச் செய்யவில்லை என்று யார் சொன்னது? நான் அதைச் செய்கிறேனா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. நான் எல்லாவற்றையும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை, இல்லையா? என்று தெரிவித்தார்.
தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
இந்த வார தொடக்கத்தில், தடைகள் மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகள் மூலம் ஈரான் அரசை வீழ்த்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசண்ட் அறிவித்திருந்தார்.
தடை விதிக்கப்பட்ட ஈரான் நிறுவனங்களுடன் தொடர்ந்து வணிகம் செய்யும் பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு தண்டனை வழங்கக்கூடிய இரண்டாம் நிலைத் தடைகள் குறித்த அச்சுறுத்தலையும் இந்த நிர்வாகம் விரிவுபடுத்தியுள்ளது.
ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், ஈரானிய எண்ணெயை அதிகளவில் வாங்கும் நாடாகவும் சீனா தொடர்ந்து இருப்பதால், இத்தகைய நடவடிக்கைகளால் சீனா குறிப்பாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பணப் பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதிலும் சீன நிதி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
ஈரானுடனான தொடர்புகளுக்காக இதுவரை பெரிய சீன வங்கிகள் மீது அமெரிக்கா தடை விதிப்பதைத் தவிர்த்து வந்துள்ளது. இருப்பினும், ஈரான் அரசு மற்றும் ராணுவத்திற்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டி, சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த பல நிறுவனங்கள் மீது அமெரிக்க கருவூலத் துறை தடை விதித்துள்ளது.
பெரிய சீன வங்கிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டால், அது அமெரிக்க-சீன பதற்றத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக அமையும் என்பதோடு, ஈரான் சம்பந்தப்பட்ட வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிதி பரிவர்த்தனைகளில் பரந்த தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடும்.
ஈரானை இலக்காகக் கொண்ட அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகளை பெய்ஜிங் ஏற்கனவே சட்டவிரோதமானவை என்று கூறி நிராகரித்துள்ளது.
டிரம்ப் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தபோது, சீன வங்கிகள் மீது தடை விதிப்பது குறித்து கருவூலத் துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b