Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பெருமை என்று இது குறித்த சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவின் சர்ச்சை பேச்சு கண்டனத்திற்குரியது என அ.தி.மு.க மாநில அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தற்குறி கூட்டத்தில் சேர்ந்துள்ளதால் இப்படிப் பேசி வருகிறார் என விமர்சித்தார்.
மேலும், நிர்மல் குமார் 5 கட்சிகளுக்குச் சென்றவர் என்றும், திமுகவை எதிர்ப்பதற்காகவே அதிமுகவில் இணைந்தவர் என்றும் குற்றம்சாட்டிய உதயகுமார், மதுரை மாவட்ட வளர்ச்சிக்காக நிர்மல் குமார் ஏதேனும் செய்திருந்தால், தான் கட்சியை விட்டு விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
திடீரென அரசியலுக்கு வந்து அவதார புருஷன் போல பேசுவது கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறினார்.
அதிமுகவை அழித்துவிடுவேன் என்று யார் பேசினாலும் முடியாது. ஒரே கட்சி, ஒரே கொள்கை என்பதுதான் எங்களது நிலைப்பாடு. நிர்மல் குமார் 5 கட்சிகளுக்குச் சென்றது குறித்து முதலில் விளக்க வேண்டும். அதன்பிறகு அதற்கு நான் பதில் சொல்கிறேன் என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
அதிமுகவில் தான் ஒரு சாமானிய தொண்டனாக இருப்பதாகக் கூறிய அவர், நிர்மல் குமார் தவெகவுக்கு கொள்கைக்காகச் சென்றாரா அல்லது வேறு காரணத்திற்காகச் சென்றாரா என்பதை விளக்க வேண்டும் என்றும், கடந்த 100 நாட்களில் தமிழ்நாட்டிற்கு அவர் என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.
தாம் அமைச்சராக இருந்த காலத்தில் வைகை நதியை பாதுகாக்கவும், மதுரையின் நீண்டகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாகவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.
மேலும், மதுரையின் சுற்றுச்சாலை மற்றும் பறக்கும் சாலை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு யார் காரணம் என்பது நிர்மல் குமாருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பிய அவர், சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமாருக்கு மதுரையின் நிலைமை குறித்து முழுமையாகத் தெரியாது என்றும் விமர்சித்தார்.
தன் மீது நிர்மல் குமார் கூறிய குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபித்தால், அதிமுகவில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.
“சட்டமன்றம் சந்தை மந்திரமாக மாறியதற்கு நிர்மல் குமார் மட்டுமே காரணம். தடையில்லா மின்சாரம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்கிறதா என்பது குறித்து அவர் சட்டமன்றத்தில் பேசியுள்ளாரா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய உதயகுமார், “அதிமுகவை அழிக்க ஓராயிரம் விஜய்களும், ஓராயிரம் நிர்மல் குமார்களும் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. எங்களிடம் கண்டென்ட் கிரியேட்டர்கள், நரேட்டிவ் செட் செய்வது போன்றவை இல்லை; உண்மையான உழைப்பு உள்ளது” என்றார்.
மேலும், பருவமழை போல ஆண்டுக்கு ஒரு கட்சிக்கு மாறுபவர்கள் தாங்கள் இல்லை என்றும், வாழ்ந்தாலும், செத்தாலும் ஒரே கட்சிதான் எனவும் கூறிய அவர், நிர்மல் குமார் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என எச்சரித்தார். மக்களுக்காக தாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P