Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மனிதர்களை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்த புலி, ஒரே மாதத்தில் 2 பேரை அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், டிரோன் மூலமும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
ஓவேலி மலைப்பகுதியில் அடர்ந்த வனம், தேயிலை மற்றும் காப்பி தோட்டங்கள், புதர்கள் அதிகளவில் உள்ளதால் புலியை நேரடியாக கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் ஓவேலி பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
அடர்ந்த புதர்கள் மற்றும் மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் கும்கி யானைகள் உதவியுடன் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, புலியின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
புலியை நேரில் பார்க்க நேரிட்டால் அதன் அருகில் செல்லவோ, புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க பின்தொடரவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
புலி தொடர்பான தகவல் கிடைத்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam