Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 29 ஆகஸ்ட் (ஹி.ச)
ஆவணி மாத சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறுவதால் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இன்று காலை நடைபெற்ற ஏலத்தில், மலர்களின் ராணியான மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனையானது.
வழக்கமாக ரூ.500 முதல் ரூ.700 வரை விற்கப்படும் மல்லிகை, இரண்டு மடங்கு விலை உயர்ந்து விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் மங்களகரமான பூவாக கருதப்படும் கனகாம்பரம்
கிலோ ரூ.800-க்கும், நறுமணத்திற்கு பெயர் பெற்ற பிச்சிப்பூ கிலோ ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சில மாவட்டங்களில் பெய்து வரும் பரவலான மழை காரணமாகச் செடிகளிலேயே பூக்கள் அழுகி, சந்தைகளுக்கான வரத்து பாதியாகக் குறைந்துள்ளது.
தேவை அதிகரித்துள்ளதாலும், வரத்து சற்று குறைந்துள்ளதாலும் விலை உயர்வு தொடரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் இந்த விலை உயர்வு பூ விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலை அளித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b