Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
கடந்த சில நாட்களாக தென்காசி, செங்கோட்டை மற்றும் குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் பெய்யும் மழையால் குற்றால அருவிகளுக்கு வரும் நீரின் அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம் சீறிப்பாய்கிறது.
நேற்று காலை நீர்வரத்து இன்று சீரானதால், 2 நாட்கள் தடைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
விடுமுறை தினம் என்பதால் நேற்று குற்றால அருவிகளில் சுற்றுலாவாசிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சிறிது நேரத்திற்குள் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஐந்தருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றினர்.
இந்த சூழலில் அருவிகளில் குளிப்பது மிகவும் ஆபத்தானது என்பதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நேற்று முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நீர்வரத்து குறையாததால் இன்று இரண்டாவது நாளாகவும் தடை தொடர்வதாக வனத்துறை மற்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
அருவிகளுக்கு செல்லும் நுழைவு வாயில்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாரும் அருவிக்குள் இறங்கி விடாதபடி ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சீசன் நேரம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் வந்த வண்ணம் உள்ளனர்.
குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் அருவிகளை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b