Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தொடர்ந்து முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வரும் தமிழ்நாட்டிற்கு, மத்திய அரசின் முதன்மை மாநிலத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் தேசிய உறுப்பு, திசு மாற்று அமைப்பு (NOTTO) சார்பில் நடைபெற்ற 15-வது இந்திய உறுப்பு தான தின விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
உடலுறுப்பு தானத்தில் திறம்பட செயல்பட்ட சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழ்நாடு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இந்த விருதினை பெற்றுக்கொண்டார்.
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி மத்திய அரசு இந்த விருதை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் மட்டுமல்லாமல் சுகாதாரத் துறையிலும் தலைசிறந்த முன்னோடி மாநிலமாக தொடர்ந்து விளங்கி வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்த பிறகு இந்த திட்டம் மேலும் வேகமெடுத்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு பிறகு 479 பேர் உடல் உறுப்பு தானம் செய்து அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 268 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு சுமார் 1500 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில், தொடர்ந்து 6-வது முறையாக இவ்விருதினை பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b