Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 11-வது நாளான இன்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நீட் முறைகேடு, மாணவர் போராட்டங்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அவையில் சுமுகமாக அலுவல்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அவை கூடிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைகளை விட்டு எழுந்து முழக்கமிட்டதால் மக்களவையில் தொடர்ந்து அமளி நிலவியது.
இதையடுத்து சபாநாயகர் அவை நடவடிக்கைகளை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையிலும் இதேபோன்ற சூழல் நீடித்ததால், அவை நடவடிக்கைகள் சீராக நடைபெறவில்லை.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியைத் தொடர்ந்து மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, நடப்பு கூட்டத்தொடரிலேயே முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, மக்களவையில் இந்திய புள்ளியியல் நிறுவனம் மசோதா, 2026 மற்றும் வங்கியாளர்களின் ஆவண சான்று மசோதா, 2026 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மாநிலங்களவையில் பிறப்பு–இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா, 2026 மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை (திருத்தம்) மசோதா, 2026 ஆகியவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை (FCRA) திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் சில வேலை நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளின் அலுவல்களும் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA