Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 30 ஆகஸ்ட் (ஹி.ச)
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திருக்காட்டுப்பள்ளி - கல்லணை சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்குகிறது.
சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், இந்தியாவில் பசிலிக்கா அந்தஸ்து பெற்ற பேராலயங்களில் ஒன்றாக திகழ்வதுமான இந்த திருத்தலம் இத்தாலியைச் சேர்ந்த வீரமாமுனிவர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியால் கட்டப்பட்டதாகும். ஆண்டுதோறும் மரியன்னையின் பிறப்பு விழா இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று
ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கி வருகிற செப்டம்பர் 9-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜீவானந்தம் மாதா உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடியை புனிதம் செய்து பேராலய வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட கொடிமரத்தில் ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.
விழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலிகள், நவநாள் பிரார்த்தனைகள், மறை உரைகள் மற்றும் ஜெபமாலை பவனிகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக மல்லிகை பூக்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னையின் திருச்சொரூபம் வைக்கப்பட்டு தேர்ப்பவனி நடைபெறும்.
இப்பெருவிழாவில் தஞ்சாவூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூண்டி அன்னையின் அருள் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b