Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர் , 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி குர்தீப் சிங் (45).
கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த இவர், மண்டாட் பகுதியில் உள்ள சந்தைக்கு காரில் சென்றார். அவருடன் ஹர்தீப் (22) என்ற இளைஞரும் சென்றிருந்தார்.
அப்போது, மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், குர்தீப் சிங் சென்ற காரை வழிமறித்தது. பின்னர் காரில் இருந்து இறங்கிய அந்த கும்பலை சேர்ந்தவர்கள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் குர்தீப் சிங் மற்றும் ஹர்தீப் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதையடுத்து, படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு குர்தீப் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஹர்தீப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.
பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை கருத்தில் கொண்டு இந்த கொலை நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA