Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச)
தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் திரு. முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்?
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு. முஸ்தபா அவர்கள், அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
பாரதத் தாயின் மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர் திரு. முகுந்த் வரதராஜன் அவர்களின் வீர வரலாற்றைப் போற்றும் 'அமரன்' திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் திரு. முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்? திரு. முஸ்தபா அவர்கள் ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்? பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, திரு. முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது. உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா?
மேலும், முதல்வர் திரு. ஜோசப் விஜய் நடிப்பில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் திரு. முஸ்தபா. திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் திரு. முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
திரு. முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களைத் தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்கள் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இதுதான் தவெக கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b