Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா - ஹவாமா தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நான்காவதாக கடந்த 9 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், அந்த குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய தம்பதி முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக இடைத்தரகர்கள் மூலம் குழந்தையை விற்க முயற்சித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குழந்தையை விற்றது உறுதியானதை அடுத்து, குழந்தையின் தாய் தந்தையான ரஹ்மத்துல்லா, ஹவாமா தம்பதி உட்பட குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த இருவர் என மொத்தம் நான்கு பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது குழந்தைகள் விற்பனை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை, குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, அரசு காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b