Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச)
கடந்த சில நாட்களாக நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு சுற்றுலா மற்றும் யாத்திரைக்காக சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 219 பேர் பல்வேறு இடங்களில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்ததும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தின.
மீட்கப்பட்ட அனைவரும் முதற்கட்டமாக நேபாளத்தில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். இன்று நள்ளிரவுக்குள் அனைவரும் சென்னை வந்தடைவார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வந்திறங்கும் அவர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் போக்குவரத்து வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எஞ்சிய சுமார் தமிழர்களுடன் இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து மீட்பதற்கான பணிகள் இந்திய-நேபாள ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் 15,000-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினரின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b