Enter your Email Address to subscribe to our newsletters

ராஜ்பூர், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி உத்தராகண்ட் மாநிலம் ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கார்கே அரசியல் பேரணியில் உரையாற்றியிருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, வலதுசாரி அமைப்பான ஸ்ரீ ராம் சேனா அந்த மேடையில் ‘தூய்மைப்படுத்தும்’ சடங்கை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செயலை காங்கிரஸ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது. இது ‘தலித்துகளுக்கு எதிரான மனநிலையை’ காட்டுவதாகவும், தீண்டாமைக்கு எதிரான அரசியலமைப்பு பாதுகாப்புகளை மீறுவதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கார்கே, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோரும் இந்தச் சடங்கை விமர்சித்துள்ளனர். இதனை ‘மனுவாத மனநிலையின்’ வெளிப்பாடு என்றும், தலித் தலைவர் ஒருவரை இழிவுபடுத்தும் சட்டவிரோத முயற்சி என்றும் அவர்கள் கண்டித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என முன்னாள் சத்தீஸ்கர் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் இன்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ராஜ்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாகேல்,
ராம்லீலா மைதான மேடையில் ஹவன் நடத்தி கங்கை நீர் தெளித்து சுத்தப்படுத்திய நிகழ்வு தீண்டாமை தொடர்பான விஷயம், அதன் காரணமாகத்தான் அந்த இடம் தூய்மைப்படுத்தப்பட்டது. இது பாரதிய ஜனதா கட்சியின் மனநிலையை பிரதிபலிக்கிறது. இந்தத் ‘தூய்மைப்படுத்துதல்’ தீண்டாமை பிரச்சினையிலிருந்து எழுவதால், நிச்சயமாக FIR பதிவு செய்யப்பட வேண்டும்
என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்தச் சடங்கில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக மறுத்துள்ளது. மத்திய அமைச்சரும் அவைத் தலைவருமான ஜே.பி. நட்டா நாடாளுமன்றத்தில் இந்தச் செயலைக் கண்டித்ததோடு, அமைப்பாளர்களுடன் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் நிகழ்ச்சியை நடத்திய ஸ்ரீ ராம் சேனா அமைப்பினரும், உள்ளூர் பாஜக பிரதிநிதிகளும், கார்கேவின் சாதி காரணமாக அல்ல, அந்த இடத்தில் மத நாகரிகம் மீறப்பட்டதாகக் கூறியதால் ஹவன் நடத்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b