Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், 2027-ம் ஆண்டு ஐ.பி.எல். சீசனில் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முகமது சிராஜ் கடந்த பல சீசன்களாக ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியின் பந்துவீச்சு வரிசையில் முக்கிய வீரராக திகழ்ந்த அவர், 2025-ம் ஆண்டு ஐ.பி.எல். மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.12.25 கோடிக்கு வாங்கப்பட்டார். அதன்பிறகு குஜராத் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், 2027-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் டிரேட் தொடர்பான பேச்சுகள் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், முகமது சிராஜின் பெயரும் அதில் அடிபடத் தொடங்கியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சிராஜை டிரேடில் விடுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இதன் மூலம் அவர் மீண்டும் ஆர்சிபி அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்சிபி அணிக்காக நீண்ட காலம் விளையாடிய அனுபவம் இருப்பதுடன், அந்த அணியின் சூழலையும் நன்கு அறிந்தவர் என்பதால் சிராஜை மீண்டும் அணியில் சேர்ப்பது ஆர்சிபிக்கு சாதகமாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எனினும், முகமது சிராஜை மீண்டும் ஆர்சிபி அணியில் சேர்ப்பது தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனவே, சிராஜ் மீண்டும் ஆர்சிபி அணிக்கு திரும்புவது குறித்த தகவல் தற்போது பரபரப்பான எதிர்பார்ப்பாக மட்டுமே உள்ளது.
டிரேட் பேச்சுவார்த்தைகள் அடுத்தகட்டத்தை எட்டும்போது, சிராஜின் எதிர்காலம் குறித்த தெளிவான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA