Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் நடந்து சென்ற 70 வயது மூதாட்டியை மாடு முட்டி தூக்கி வீசியதில், அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை திருவல்லிக்கேணி தானப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தேவி (70). இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் தேவி டீ குடிப்பதற்காக திருவல்லிக்கேணி தீர்த்தாரப்பன் தெரு வழியாக அருகில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மாடு, திடீரென தேவியை முட்டியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த போதிலும், தேவி தானாகவே எழுந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்ற அவர், ஆரம்பத்தில் காயத்தின் தீவிரத்தை உணராமல் படுத்து ஓய்வெடுத்துள்ளார். பின்னர் அவரது இடது கையில் வலி அதிகரித்ததால், நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தானாகவே சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டபோது, தேவியின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜாம் பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ