உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் புகார்
சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத்தில் (NCW) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மக
Tvk


Gg


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத்தில் (NCW) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணையத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில்,

ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற அரசியல் பேரணியில், காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்பாக உரையாற்றிய போது, உதயநிதி ஸ்டாலின் ஒரு முக்கிய பெண் பொது நபரை இலக்காகக் கொண்டு, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், இரட்டை அர்த்தம் கொண்ட மற்றும் பாலியல் ரீதியாகத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய பேச்சுகள் பெண்களின் கண்ணியத்தை பாதிப்பதோடு, பொதுவெளிகளில் பெண்களை ஒரு பொருளாகக் கருதும் மனநிலையையும், பெண்களுக்கு எதிரான வாய்மொழித் துன்புறுத்தலையும் ஊக்குவிக்கும் அபாயகரமான முன்னுதாரணமாக அமையும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து தலையிட்டு, தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் இடம்பெற்ற முழு பேச்சு மற்றும் காணொளிக் காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் கோரியுள்ளது.

மேலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் விளக்கம் கோருவதுடன், நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கோருமாறு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்களின் மானபங்கிற்கு களங்கம் விளைவித்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்து, வழக்குப் பதிவு செய்யுமாறு சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

பெண்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கும் தனது சட்டப்பூர்வ பொறுப்பின் அடிப்படையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த புகாரை அவசரமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ