Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
திமுக சார்பில் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தமிழக முதல்வருக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசியதாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி என்பவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் போலீஸார் உதயநிதி ஸ்டாலினை இன்று கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், திமுகவினர் தவெக அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதையடுத்து, அதைக் கண்டித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்ததாவது:
சட்டமன்றத்தில் தி.மு.க.வினரின் கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணறும் த.வெ.க. அரசு, பழிவாங்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்துள்ளது.
இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
த.வெ.க. அரசு தொடர்ந்து ஜனநாயக வழியிலான போராட்டங்களை முடக்கி, மக்களின் குரல்வளையை நெரித்து வருகிறது.
இத்தகைய அடக்குமுறைகளுக்கு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது.
என்றார்.
முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கைது நடவடிக்கைக்கு எதிராகவும், காவல்துறையைக் கண்டித்தும் தீவிர முழக்கங்களை எழுப்பினர்.
இந்தத் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் அங்கு வந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உட்பட நூற்றுக்கணக்கான
தி.மு.க-வினரை கைது செய்தனர்.
Hindusthan Samachar / vidya.b